டெங்கு, சிக்குன்குனியா பரவல் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா, டெங்குவை பரப்பும் அதே வகையான நுளம்புகள் தான் சிக்குன்குனியா நோயை பரப்புவதாகவும் கூறியுள்ளார்.
நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, பலர் வெளியிடங்களுக்குச் சென்றுள்ளதனால், அவர்களது வீடுகளும், சுற்றுப் புறங்களும் சுத்தம் செய்யாது நுளம்புகள் பரவலுக்கு வசதியாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், தமது வீடுகள், பணியிடங்கள் மற்றும் பாடசாலை சுற்றுப் புறங்களை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்பு பெருக்கத்தைத் தடுக்க முடியும் என்றும், இதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.