வெடுக்குநாறிமலையில் மீண்டும் நிறுவப்பட்ட விக்கிரகங்கள்

வெடுக்குநாறிமலையில் மீண்டும் நிறுவப்பட்ட விக்கிரகங்கள்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சேதமாக்கப்பட்டு அகற்றப்பட்டிருந்த ஆதிலிங்கம் உள்ளிட்ட ஏனைய விக்கிரகங்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்றையதினம் மீள பிரதிஸ்டை செய்யப்பட்டன.

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் கடந்த மாதம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து அழிக்கப்பட்டதுடன் சில விக்கிரகங்கள் களவாடப்பட்டிருந்தன.

இதனையடுத்து ஆலயத்தில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் ஏற்பாடுகள் பல தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற வழக்கின் காரணமாக அதற்கு தடைகள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நீதின்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன் சேதமாக்கப்பட்டு அகற்றப்பட்டிருந்த விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் ஆதிலிங்கம் உள்ளிட்ட ஏனைய விக்கிரகங்கள் இன்றைய தினம் காலை மீள பிரதிஸ்டை செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.