குர்ஆன் மதரஸாவில் சிறுவன் கழுத்து நெருக்கி கொல்லப்பட்டாரா? மதரஸாவின் நிர்வாகி கைது!

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியிலுள்ள மதரஸாவில் இருந்த சிறுவன் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. குறித்த சிறுவனின் கழுத்துப் பகுதி நெரிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார்.

இந்தநிலையில், சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான மத்ரஸாவின் நிர்வாகி பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, சந்தேகநபர் நாளைய தினம் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதுகுறித்து தெரியவருவதாவது, சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு நேற்று முன்தினம் (05) இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சடலமாக சேர்க்கப்பட்டார். 

இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் குறித்த மதரஸாவின் நிர்வாகியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் என்றும் அந்த மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே நிறைய பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

களத்திற்கு வருகை தந்த சாய்ந்தமருது பொலிஸார் மதராஸாவின் மான்பை பேணும் விதமாக மக்கள் கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும், தடயியல் பொலிஸாரையும்,  நீதவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.