இலங்கைத்தீவை நோக்கி நகரும் மீண்டும் ஒரு காற்று சுழற்சி!

இலங்கைத்தீவை நோக்கி நகரும் மீண்டும் ஒரு காற்று சுழற்சி!

இலங்கைத் தீவுக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக கடந்த 28ஆம் திகதி முதல் பல பாகங்களில் மழை காலநிலை நீடித்தது.

ஆனால் அந்த காற்று சுழற்சியின் நகர்வு தாமதம் காரணமாக கடந்த 29ஆம் திகதி முதல் சற்று கனத்த மழை பெய்தது.

தற்போது இந்த காற்று சுழற்சி இலங்கையின் தெற்காக நகர்ந்து கொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்று சுழற்சி நகர்ந்து சென்ற பின் பெரும்பாலும் இன்று (31) முதல் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மீண்டும் ஒரு காற்று சுழற்சி எதிர்வரும் 13, 14, அல்லது 15ஆம் திகதியளவில் இலங்கைத் தீவுக்கு அண்மையாக வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 
 
தீவின் ஏனைய பகுதிகளில் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது

மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.