பங்களாதேஷில் இலங்கை மாணவர்களின் நிலை? - ஊரடங்கு உத்தரவு அமுல்!

பங்களாதேஷில் இலங்கை மாணவர்களின் நிலை? - ஊரடங்கு உத்தரவு அமுல்!

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக நாடு முழுவதும் அமுலாகும் வகையில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டாக்காவில் சுமார் பதினைந்து நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அரசாங்கம் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் 105 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க தொலைக்காட்சிக்கு தீ வைத்ததாகவும், நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சி செய்தி சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் இணைய இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.

1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் உயிர்நீத்தவர்களை  போர்வீரர்களாக கருதி அரசு வேலைகளில் அவர்களின் குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்கும் கோட்டா முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில், பங்களாதேஷின் உயர் நீதிமன்றம் இந்த ஒதுக்கீட்டு முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்திருந்த போதும்,  மேல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதை புதுப்பிக்க அரசாங்கம் முயற்சி எடுத்ததை தொடர்ந்து இந்த மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. 

இந்த சூழ்நிலையில்,  அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நாட்டிலுள்ள 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாததாலும் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடினார்.

அரசாங்கத்தின் வேலை ஒதுக்கீட்டு முறையை மாற்றக் கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் பங்களாதேஷ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நேற்று (19) மாத்திரம் 52 ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர் சங்கப் பிரதிநிதிகள் தமது போராட்டங்களைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களின் மரணத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.