ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300ஆக உயர்வு!

ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300ஆக உயர்வு!

கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப காலநிலையால் மக்காவில் கடுமையான வெப்பக் காற்று வீசி வருகின்றது.

இதன்காரணமாக, ஹஜ் யாத்திரை சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சவூதி அரேபியாவில் வெப்ப அலை காரணமாக 1300 ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் பகத் அல் ஜலாஜெல் கூறும்போது, ஹஜ் பயணம் சென்ற யாத்திரிகர்கள் இறப்பு எண்ணிக்கை 1,301-ஐ எட்டி உள்ளது. 

83 சதவீதம் பேர் ஹஜ் பயணம் செய்ய பதிவு செய்யப்படாதவர்கள். போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.

வெப்ப அலையின் ஆபத்துகளில் இருந்து யாத்திரிகர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

அனுமதி இல்லாமல் மக்காவுக்கு வந்த 1,40,000 யாத்திரிகர்கள் உட்பட 5 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். 

கடந்த ஆண்டைப் போலவே, 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.