இந்தியாவிடமிருந்து சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு உதவி- எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?

வட மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதுவர் ராகேஸ் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு உதவி- எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து  ஏற்பாடு செய்த சிறிய நடுத்தர வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

“இந்தியாவை பொறுத்தவரை சிறிய நடுத்தர உற்பத்தியாளர் 40 வீதமான பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்பை செய்கின்றார்கள். 

அதேபோல், ஏற்றுமதியில் 50 வீதமானவை சிறிய நடுத்தர உற்பத்தி ஏற்றுமதியில் பங்களிப்பை செய்கின்றன. அது மட்டுமன்றி வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இவர்களே முன்நிலையில் உள்ளார்கள்.

அவ்வாறான நிலையில் இலங்கையில்  வடக்கு மாகாணத்திற்கும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் தமது உற்பத்தியின் தரத்தை மேப்படுத்த வேண்டும். இந்தியா அதற்கான உதவிகளை வழங்கும்

பொருளாதார உற்பத்தியில் சரியான நடைமுறைகளை பின்பற்றி தரநிர்ணயங்களை செய்வதன் மூலம் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும்.

இந்த கண்காட்சியில் 140 க்கும் மேற்பட்ட விற்பனை காட்சிக் கூடங்கள் உள்ளன.

இவை இன்னும்  தரமாக கவர்ச்சிகரமாக இருக்கும் போது இந்தியாவிற்கோ ஐரோப்பாவிற்கோ ஏற்றுமதி செய்யும் போது பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும்.

இந்தகைய கண்காட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது தொடர்பாடல்கள் அதிகரிக்கும். இவைதொடர வேண்டும்” என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் உரையாற்றுகையில், “சிறிய நடுத்தர முயற்சியாளர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் வடக்கில் உள்ள உற்பத்தியாளர்களை ஏனையவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காக இந்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

வடக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இவர்கள் பங்களிப்பு முக்கியமானது. இந்த முயற்சியாளர்களை அடுத்த கட்டத்திற்கு தமது பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற ஒழுங்கமைப்புகளை செய்வதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்.

இந்தியாவின் உதவி தேவையானவர்கள் வணிகர் சங்கத்தையோ அல்லது இந்திய துணைத் தூதுவராலயத்தையோ தொடர்பு கொள்ள முடியும். 

இந்த கண்காட்சியை ஒவ்வோரு வருடமும் நடாத்துவதற்கு எண்ணியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.