மாங்காடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு பூஜைகள்!

நவராத்திரி விழா ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்து ஆலயங்களிலும், பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் இவ்விழா மிகவும் சிறப்பான முறையில் தொடர்ந்து ஒன்பது நாட்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மாங்காடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நவராத்திரி பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆலயத்தின் மூலமூர்த்தியான மாணிக்கப்பிள்ளையாருக்கு பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்த்தில் விசேடமாக கொலு வைத்து அமைக்கப்பட்ட ஸ்தானத்தில் நவராத்திரி பூஜைகள் முப்பெரும் தேவிகளுக்கு இடம்பெறுகின்றன. 

பூஜைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ பே.கிருஸ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

நவராத்திரி என்பது “ஒன்பது இரவுகள்” என்று பொருள்படுகின்றன. அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும், நவராத்திரி எனப்படுகிறது. 

சந்திர சுழற்சியின் முதல் ஒன்பது நாட்களும் பெண் தன்மையாக கருதப்படுகின்றது. தெய்வீகத்தின் பெண் தன்மையாகக் கருதப்படும் தேவிகளுக்கு, இது மிகச் சிறப்பான காலமாகவும் நோக்கப்படுகின்றது.

இந்தநிலையில் முதல் மூன்று நாட்களும், துர்க்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாட்களும், இலட்சுமிக்கும் இறுதி மூன்று நாட்களும் கல்வித் தெய்வமான சரஸ்வதிக்கும் விழாக்கள் இடம்பெற்று பத்தாம் நாள் விஜயதசமி அன்று ஆயுத பூஜை. ஏடு தொடக்குதலுடன் நிறைவு பெறும்.