மட்/கோறளைப்பற்று பிரதேசசபைக்கு புதிய தவிசாளர்!

மட்/கோறளைப்பற்று பிரதேசசபைக்கு புதிய தவிசாளர்!

மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் முன்மொழிந்து வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த தனபாலன் நிர்மலன் முன்மொழியப்பட்டார்.

இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு முறையில் நடத்த வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களினால் உறுப்பினர்களிடம் கோரப்பட்டது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு 26 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தார்கள்.

இதன்போது தவிசாளராக போட்டியிட்ட சுந்தரலிங்கம் சுதாகரன் அவர்களுக்கு ஆதரவாக இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரசை சேர்ந்த 04 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினரும் என மொத்தமாக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த தவிசாளராக போட்டியிட்ட தனபாலன் நிர்மலனுக்கு 4 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு அளித்ததுடன் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

இதன் பிரகாரம் தமிழரசுக் கட்சியை சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அதை அடுத்து பிரதி தவிசாளர் தெரிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது தமிழரசு கட்சியைச் சேர்ந்த குழந்தைவேல் பத்மநீதன் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த நவராசலிங்கம் நிமல்ராஜ் முன்மொழியப்பட்டு வழி மொழியப்பட் டிருந்தார்.

இதில் குழந்தவேல் பத்மநீதனுக்கு ஆதரவாக 15வாக்குகளும் நவராசலிங்கம் நிமல்ராஜ் அவர்களுக்கு ஆதரவாக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்துடன் நடுநிலையாக 7 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்.

அதன்படி கோறளைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளராக குழந்தவேல் பத்மநீதன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபை அமர்வை தொடர்ந்து தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தன் உட்பட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.