'பார் குமார்' பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று வெளியிட்டார்.
”இந்தக்காலப் பகுதியில் மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.
மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்குதியில் வழங்கப்பட்டுள்ளன.
சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு 24, கம்பஹா 18, களுத்துறை 8, காலி 9, மாத்தறை 5, ஹம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை 5, கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அநுராதபுரம் 4, பொலன்னறுவை 3, புத்தளம் 6, குருணாகலை 8, பதுளை 9, மொணராகலை 7, இரத்தினபுரி 6 , கேகாலை 2 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலின் அடிப்படையிலேயே சில எம்.பிகளின் பெயர்களும் பார் குமார் என மாறியிருந்தன. அரசியல் இலஞ்சத்தின் போர்வையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை பொதுமக்களும் அறியக்கூடிய விதத்தில் வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.