மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு-2023

மாவீரர் பணிமனை பிரித்தானியாவின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் "மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு" 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பமானது.

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு-2023

தாயக விடுதலைப் போரில் தங்கள் பிள்ளைகளையும், உடன் பிறந்தார்களையும், உறவுகளையும் தியாகம் செய்த மதிப்புக்குரியவர்களை மதிப்பளிக்கும் நாளாக இந்த நாள் தமிழீழ தேசிய தலைவரினால் தாயகத்தில் அடையாளப்படுத்தப்பட்டது. 

 இந்நாளானது மரபுகளுக்கு ஏற்ப நடைபெற்றது. தங்கள் உறவுகளை தமிழினத்திற கு உவந்தளித்து நிற்கும் உறவுகளின் மனத்துயரினை குறைப்பதற்கும், தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த இலட்சிய வீரர்களின் இலக்கினை நாம் நிச்சயம் அடைவோம் என்று உறவுகளுக்கு உறுதி அளிப்பதற்குமான நாளாக தாயகத்தில் இந்நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. இவ்வாறான நிகழ்வுகளில், தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் பிரித்தானியாவில் இந் நிகழ்வு நடைபெற்றது.

உலகத் தமிழர் வரலாற்று மைய இளையோரின் பண்ணிசை முழங்க மாவீரர் தெய்வங்களின் உறவுகள் துயிலும் இல்ல வாயில் இருந்து மதிப்புடன் அழைத்து வரப்பட்டனர். 

தொடர்ந்து பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. பொதுச்சுடர்களை பிரதான குருக்கள் சதீஷ் ஐயா, திரு.இராஜலிங்கம், திருமதி.நிலோசனா செல்வன்.திகழ்பருதி, செல்வி.அங்கயற்கண்ணி ஆகியோர் ஏற்றினர். பிரித்தானியாவின் தேசியக் கொடியினை திருமதி.கௌசல்யா அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசிய கொடியினை திரு.ரமேஸ்வரன் அவர்கள் ஏற்றினர். தொடர்ந்து பொது மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.துக்சி அவர்கள் ஏற்ற மலர் மாலையினை திரு,திருமதி விக்னேஸ்வரன் அணிவித்தனர். அக வணக்கத்தினை தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொண்டர்களின் வரவேற்புடன் மாவீரர் குடும்பங்கள் பிரதான மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

மண்டபத்தின் தொடக்க நிகழ்வாக, மாவீரர் வணக்கப் பாடலுக்கு செல்வி.நிறையரசி சோதிதாஸ் அவர்கள் நடனம் ஒன்றினை வழங்கினார். தொடர்ந்து திரு.புரட்சி அவர்களின் தலைமை உரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இவ் நிகழ்வில் கலந்து கொண்ட மாவீரர் குடும்பம் மற்றும் உரித்துடையோருக்கான மாவீரர் நினைவுப் பொருளினை நிகழ்வில் கலந்து கொண்ட பெருமக்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர். மதிப்பளித்தலின் இடையே செல்வி. விகேஜனா திவாகரன் அவர்களின் நடனமும், ஆசிரியர் செல்வி.லாவண்யா-வரதராஜ் அவர்களின் நெறியாள்கையில் செல்விகள் ஜெய்சா-ஜெயக்குமார், ரமணி-சிறிமோகனராஜா அபிதா -சசி, ஷானுகா-தவராசா, நிறையரசி-சோதிதாஸ் ஆகியோரின் குழு நடனமும் திரு.சுரேஸ் திரு.மைக்கல் ஆகியோர் வழங்கிய எழுச்சி பாடல்களும் இடம்பெற்றது. அத்துடன் மாவீரர்கள் நினைவுகளை சுமந்து கவி ஒன்றினை திரு.அனாதையன் அவர்கள் உணர்வுடன் பகிர்ந்து கொண்டார். 

எதிர்வரும் 19.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் மாநகரில் நடைபெற இருக்கும் தமிழீழ தேசியக்கொடி நாளில் ஏற்றுவதற்கான, தேசிய கொடியினை மாவீரர் குடும்பங்கள் ஆசீர்வாதித்து வழங்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அதனை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வானதுஇவ்நாளினை மேலும் கனதி மிக்கதாக மாற்றியது. இந்த தேசியக்கொடியானது மீண்டும் 27.11.2023 அன்று மாவீரர் நாளில் ஏற்றுவதற்காக மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவிடம் உரிய முறைப்படி கையளிக்கப்படும். 

இந்த சிறப்பு மிக்க நிகழ்வில், பிரித்தானியாவில் வாழும் பல நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.