தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்திருக்க இதுதான் காரணம் - மனோ கணேசன் 

நுவரெலியா முதல் கொழும்பு - அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வாழவும், வாழ்வாதார பயிர் செய்கைக்கு காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் எமது கொள்கையை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார்.  

தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்திருக்க இதுதான் காரணம் - மனோ கணேசன் 

நுவரெலியா முதல் கொழும்பு - அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வாழவும், வாழ்வாதார பயிர் செய்கைக்கு காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் எமது கொள்கையை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார்.  

கொழும்பில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்கு தொடர்மனைகளை கட்டி சொந்த வீடுகளை வழங்கவும் சஜித் பிரேமதாச எம்முடன் ஒரு கட்சியாக, தேசிய கூட்டணியாக உடன்பாடு கண்டுள்ளார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உரை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியில், பிரதான பங்காளி கட்சியாக அங்கம் வகிக்க பிரதான காரணங்களில் இது ஒன்றாகும்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இவை தொடர்பில் எமக்கு எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் உறுதி அளித்துள்ளார்.  

பகிரங்கமாக மேடைகளில் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதை இன்று மீண்டும் கூறி உறுதி செய்தார்.

மத்திய, மேல், சபரகமுவ, ஊவா, தென், வடமேல் ஆகிய 6 மாகாணங்களின், பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு (அவிசாவளை), களுத்துறை, குருநாகலை, காலி, மாத்தறை ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 102  பிரதேச செயலக பிரிவுகளில் பெருந்தோட்ட துறை பரந்து காணப்படுகின்றது.

எங்கெல்லாம் எம்மவர் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் காணி உரிமையும், வீட்டு உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

அதேபோல், தொழில், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகிய காரணங்களை தேடி பெருந்தொகையான மக்கள் மலைநாட்டு பிரதேசங்களில் இருந்தும், வடக்கு கிழக்கு  பிரதேசங்களில் இருந்தும் தலைநகரமான கொழும்பிற்கு இடம்பெயர்ந்தும் குடியேறுகிறார்கள். 

இங்கேயே பிறந்து வளர்ந்து வாழும் மக்களும் இருக்கின்றார்கள். அனைவருக்கும் கல்வி, வீடு, வாழ்வாதார உரிமைகளை உறுதி செய்து, பாதுகாப்பு அளிக்க நான் இங்கே தயாராக இருக்கிறேன்.    

ரணிலும், சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புகிறார்கள். நாமும் விரும்புகிறோம். ஆனால், அது எமது கைகளில் மாத்திரம் இல்லை. பல புற சக்திகள் அதற்கு தடையாக இருக்கின்றன.  அதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

எமது பிரதான நோக்கு, எமது மக்களின் விடிவுக்கு நிரந்தர தீர்வுகளான காணி உரிமையும், வீட்டு உரிமையும், கல்வி உரிமையும் உறுதிப்படுத்தப்படுவதாகும். 

கல்வி உரிமைக்கு இந்திய அரசு உதவும் என நான் நம்புகிறேன். காணி உரிமையை, நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்வோம். 

இவற்றை எப்படி பெறுவது என்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்க்கதரிசனத்துடன் நடக்கின்றது. நாம் நினைத்தால், உடன் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறலாம். 

ஆனால் அதைவிட இதுவே எமது நிதானமான தீர்க்கதரிசன நோக்கு என்பதை நான் பொறுப்புடன் கட்சி தலைவராக கூறி வைக்க விரும்புகிறேன்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

SJB-UNP alliance talks : Mano reveals what happened - NewsWire