மௌனராகம் புகழ் “மிஸ்டர் சந்திரமௌலி..’ காலமானார்!

மௌனராகம் திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலியாக நடித்த புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார்.

மௌனராகம் புகழ் “மிஸ்டர் சந்திரமௌலி..’  காலமானார்!

1974ஆம் ஆண்டில் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, தூண்டில் மீன் உள்ளிட்ட 8 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பொண்டாட்டி தேவை, தாயம்மா, சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் திரைப்படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக சந்திரமௌலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். 

நாயகனான கார்த்தி, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அவரை அழைக்கும் காட்சி மிகப் பிரபலமானது.

சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இயக்குநர் பாரதிராஜா, “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.